கர்த்தரே நித்திய சிருஷ்டிகர் 
41
1 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்! 
நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள். 
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம். 
யார் சரியென்று முடிவு செய்வோம். 
2 இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள். 
கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்? 
நன்மையானது அவரோடு நடக்கிறது. 
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார். 
அவைகள் தூசிபோல ஆகின்றன. 
அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார். 
அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப் போன்று ஓடிப்போனார்கள். 
3 அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை. 
இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார். 
4 இவை நிகழக்காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்? 
தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்? 
கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். 
கர்த்தராகிய நானே முதல்வர்! 
தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன். 
எல்லாம் முடியும் போதும் நான் இங்கே இருப்பேன். 
5 வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்! 
பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள். 
இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள். 
6 “தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். 
7 ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.” 
கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும் 
8 கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். 
யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். 
ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன். 
9 பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள். 
நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள். 
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன், 
‘நீ எனது ஊழியன்.’ 
நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை! 
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். 
பயப்படாதே, நான் உனது தேவன். 
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். 
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன். 
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள். 
ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள். 
உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள். 
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். 
ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. 
உங்களுக்கு எதிராகப் போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள். 
13 நான் உனது தேவனாகிய கர்த்தர். 
நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன். 
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே! 
நான் உனக்கு உதவுவேன்.’ 
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே. 
எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்! 
நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”. 
கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார். 
“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்) 
உன்னைக் காப்பாற்றுகிறவரும் 
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன். 
அது கூர்மையான பற்களை உடையது. 
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள். 
அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள். 
நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய். 
நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய். 
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய். 
அவற்றைக் காற்று அடித்துச் சென்று, சிதறடித்துவிடும். 
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய். 
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்”. 
17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள். 
ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். 
அவர்கள் தாக மாக இருக்கிறார்கள். 
அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று. 
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன். 
நான் அவர்களை விடமாட்டேன். 
அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன். 
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன். 
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன். 
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன். 
வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும். 
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும். 
அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன். 
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். 
கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள். 
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். 
அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்”. 
பொய்த் தெய்வங்களுக்குக் கர்த்தர் சவால் விடுகிறார் 
21 யாக்கோபின் அரசரான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 
22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 
23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம். 
24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!” 
கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார் 
25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான். 
அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான். 
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல 
அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்). 
26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது. 
நாம் அவனைத் தேவன் என்று அழைப்போம். 
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை. 
அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 
அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது. 
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர். 
இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன். 
‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’” 
28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன். 
அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல. 
அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை! 
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்! 
அவைகளால் எதுவும் செய்யமுடியாது! 
அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை! 
