யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான் 
26
1 அப்போது யோபு பதிலாக: 
2 “பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்? 
ஆம், நீங்கள் உண்மையிலேயே நல்ல ஊக்கமூட்டுபவர்களாக இருந்திருக்கிறீர்கள்! 
உண்மையிலேயே நீங்கள் என் தளர்ந்துப்போன கரங்களை மறுபடியும் பெலப்படசெய்தீர்கள். 
3 ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்! 
நீங்கள் எத்தனை ஞானவான்கள் என்பதை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்!* 
4 இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்? 
யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது? 
5 “பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன. 
6 ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். 
மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை. 
7 வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார். 
வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார். 
8 தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார். 
மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார். 
9 முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார். 
அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார். 
10 தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து 
ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார். 
11 தேவன் பயமுறுத்தும்போது 
வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன. 
12 தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது. 
தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது. 
13 தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். 
தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது. 
14 தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே. 
தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம். 
தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான். 
* 26:3: வாக்கியம் 2-3 யோபு இங்கே சொல்வதைப் போல் உண்மையில் அர்த்தம் கொள்ளவில்லை. யோபு பலியிடப்படுகிறான். அவன் இதனை அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை என்பதைப் போல் பேசுகிறான்.
