140
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல் 
1 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். 
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். 
2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். 
அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். 
3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை. 
அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும். 
4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். 
அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள். 
5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள். 
என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள். 
அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள். 
6 கர்த்தாவே, நீரே என் தேவன். 
கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும். 
7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர். 
நீரே என் மீட்பர். 
போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர். 
8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும். 
அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும். 
9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும். 
அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள். 
ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும். 
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும். 
என் பகைவர்களை நெருப்பில் வீசும். 
அவர்களைக் குழியில் தள்ளும், 
அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும். 
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். 
அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும். 
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன். 
தேவன் திக்கற்றோருக்கு உதவுவார். 
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். 
நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள். 
