29
தாவீதின் பாடல் 
1 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்! 
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள். 
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்! 
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார். 
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும். 
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும். 
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும். 
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும். 
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார். 
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார். 
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது. 
எர்மோன் மலை நடுங்குகிறது. 
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது. 
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது. 
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது. 
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது. 
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும். 
கர்த்தர் காடுகளை அழிக்கிறார். 
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள். 
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார். 
என்றென்றும் கர்த்தரே அரசர். 
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக. 
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக. 
