4
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது 
1 என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும். 
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்! 
என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்! 
2 ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்? 
என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். 
நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள். 
3 கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார். 
கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 
4 உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள். 
படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள். 
5 தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக் 
கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்! 
6 “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்? 
கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!” 
என்று பலர் கூறுகிறார்கள். 
7 கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்! 
தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன். 
8 நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன். 
ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர். 
