57
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது. 
1 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். 
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். 
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில், 
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன். 
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன். 
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார். 
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். 
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். 
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார். 
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது. 
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். 
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள். 
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும். 
அம்புகளைப் போலவும் கூர்மையானவை. 
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை. 
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர். 
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது. 
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். 
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். 
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள். 
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார். 
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார். 
நான் அவரைத் துதித்துப் பாடுவேன். 
8 என் ஆத்துமாவே, எழுந்திரு. 
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக! 
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன். 
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன். 
10 உமது உண்மையான அன்பு 
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. 
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். 
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது. 
