65
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். 
1 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன். 
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன். 
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம். 
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். 
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். 
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் 
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும். 
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். 
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். 
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! 
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம். 
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். 
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். 
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். 
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள். 
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார். 
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம். 
7 சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். 
“சமுத்திரம்” போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார். 
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். 
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். 
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். 
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். 
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். 
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: 
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். 
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். 
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். 
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். 
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். 
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். 
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. 
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. 
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. 
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். 
