8
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம் 
1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! 
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது. 
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். 
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர். 
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். 
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன். 
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? 
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? 
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்? 
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! 
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். 
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். 
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர். 
7 ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர். 
8 வானத்துப் பறவைகளையும் 
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர். 
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது! 
