145
தாவீதின் ஜெபங்களுள் ஒன்று 
1 என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன். 
உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன். 
2 நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன். 
நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன். 
3 கர்த்தர் பெரியவர். 
ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள். 
அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது. 
4 கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள். 
நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள். 
5 உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை. 
உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன். 
6 கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். 
நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன். 
7 நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். 
உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள். 
8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர். 
கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர். 
9 கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். 
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார். 
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும். 
உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள். 
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள். 
நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள். 
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள். 
உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். 
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும். 
நீர் என்றென்றும் அரசாளுவீர். 
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார். 
கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார். 
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன. 
அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர். 
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, 
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர். 
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே. 
அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும். 
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார். 
உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ள வராயிருக்கிறார். 
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார். 
கர்த்தர் தம்மைப் பின் பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார். 
அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார். 
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார். 
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். 
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்! 
என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். 
