20
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 
1 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். 
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். 
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். 
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். 
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். 
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். 
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். 
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். 
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். 
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். 
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன். 
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். 
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். 
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். 
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். 
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். 
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். 
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். 
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். 
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். 
ஆனால் நாங்கள் வென்றோம்! 
நாங்கள் வெற்றிபெற்றவர்கள். 
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! 
தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்! 
